Friday, July 30, 2010

நான் ரசித்த சில கவிதைகள்..... பாகம் - 2

கண்டு கொண்டேன்....




கடவுளைத் தேடித் தேடி
தேய்ந்து போனது
கால்கள்!

காண முடியாமல்
காய்ந்து போயின
கண்கள்!

இறுதியில்
இமைகளை
மூடிக் கொண்டு
தேடினேன்!

ஞானம் பிறந்தது...
பத்து மாதங்களாய்
கருவறையில் காத்து
பெற்று வளர்த்த
தாயே கடவுள்..!

நட்பு..!



சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல..
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான்
நட்பு.


காதல்!



கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்
கடல் அலை வந்து
அள்ளிச் சென்றது
அழகான கவிதை என்று!

ஏக்கம்



விளை நிலங்கள்
எல்லாம்
வீட்டு மனைகளாக!
ஏக்கத்துடன் நின்றன,
புல்மேய முடியாமல்
மாடுகள்

சித்தனும் பித்தனும் இயற்கை!




பிரபஞ்சத்தின் நிர்வாணத்திற்கு
பசுமையில் கட்டிய பட்டாடை;
மரமும் செடியுமென் சாதியென்றுணர்த்திய
உந்து சக்தி; உயிர்நாடி இயற்கை!

ஆழ்கடல் சூழ்ந்த சூழ்சுமம்
உலகை அள்ளிப் பருகிடாத கொடை;
சுடும் நெருப்பு - சுட்டெரிக்கும் சூரியன்
கடும் பல நட்சத்திரங்களை தாண்டி
பூமி வெளிச்சம் பெற்றிருப்பது இயற்கை;

ஆலகால விசமும் பூக்கும்
அடித்துத் தின்ன விளங்கும் பிறக்கும்
இடையே மனிதன் பிறந்து -
மனிதம் நிலைப்பதே இயற்கை;

கண்முன் வாழும் மனிதனறியா யதார்த்தம்
கோபம் வந்தால் கடலுடைத்து
நிலம் பிளந்து
எரிமலை வெடித்து
காற்றை புயலாக்க; மழையை வெள்ளமாக்கி
மனிதனுக்கு தன் இருப்பை நினைவுறுத்தி
பூவிற்குள் ஒளிந்திருக்கும் சூரிய சந்திர
நாயகன் நாயகி;

கல்லை வடித்து சாமி என்றாலும்
கேட்டதை கொடுத்து -
கொடுத்ததை அழிக்கவும் அறிந்த
சித்தனும் பித்தனும் இயற்கை!

நினைவு



சாலையை
கடக்க உதவிய பின்,
"பார்த்துப் போங்க"
என்ற
என்னைப்பற்றி
என்ன நினைத்திருப்பார்
அந்த பார்வையற்றவர்?!

தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?



வங்கக் கடல் மீது
தங்கத் தமிழ் மகனை
சிங்களத்து வெறிநாய்
சங்கறுத்துக் கொல்கிறது
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
வலைவீசி மீன்பிடிக்க
அலைமீது சென்றவனின்
தலைமீது குண்டுவீசும்
கொலைச் செயலும் நடக்கிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
நாவாய் படைநடத்தி
நாடுகளை வென்ற இனம்
நாள்தோறும் அகதிகளாய்
நாடிழந்து வருகிறது.
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?
ஆடையை உலகுக்கு
அறிமுகம் செய்தவனை
ஆடையவிழ்த்து அம்மணமாய்
அடித்து சுட்டுக் கொல்கிறான்
தமிழா! இன்னுமா நீ உறங்குகிறாய்?

வாழ்க்கை கணக்கு



வாழ்க்கையில்,
அன்பை கூட்டிக்கொள்!
அறிவை பெருக்கிக்கொள்!
இனிமையை
தனிமையால் வகுத்துக்கொள்!
பாவத்தைக் கழித்துக் கொள்!
பிறருடன் சமமாக
வாழ கற்றுக் கொள்...!

1 comment:

அம்பிகா said...

\\சிறகு கிடைத்தவுடன் பறப்பதல்ல..
சிலுவை கிடைத்தாலும் சுமப்பதுதான்
நட்பு.\\

\\விளை நிலங்கள்
எல்லாம்
வீட்டு மனைகளாக!
ஏக்கத்துடன் நின்றன,
புல்மேய முடியாமல்
மாடுகள்\\

\\சாலையை
கடக்க உதவிய பின்,
"பார்த்துப் போங்க"
என்ற
என்னைப்பற்றி
என்ன நினைத்திருப்பார்
அந்த பார்வையற்றவர்?!

நானும் ரசித்தேன்.
நல்ல பகிர்வு ராஜ்.